search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்"

    • இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும்.
    • சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    திருப்பூர்:

    பி.ஏ.பி., கால்வாயில் குப்பை, கழிவுகள் மற்றும் இறந்த கோழிகள் வீசப்படுவதால் கால்வாயில் வரும் தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதில் பெரும் சங்கடத்தை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கால்வாய் மாசு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் வழங்கிய அறிக்கை அடிப்படையில் ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:-

    கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க, நமக்கு நாமே திட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் வேலி அமைத்து தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதற்காகும் செலவினத்தில் 3ல் ஒரு பகுதியை வழங்க விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.

    பொங்கலூர் பகுதியில் உள்ள கால்வாயில் பயன்பாடற்ற ஜீப் சாலை வழியாக கோழிக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு கால்வாயில் கொட்டப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அச்சாலையை மூட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கால்வாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும். இதை உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

    அதிக அளவு குப்பை, கழிவு கொட்டப்படும் இடத்தையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள், கோழிப்பண்ணை, ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். கால்வாயில் குப்பை மற்றும் கோழிக்கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அபராத தொகை குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

    இவையெல்லாம், சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.  

    • விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யக்கூடிய நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை நீர் நிலையில் கரைக்கக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகளை கரைக்கக் கூடாது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது.

    மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆலை விரிவாக்கத்துக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×